வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தீர்மானம்- சட்டசபையை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரு தீர்மானத்தை நிறைவேற்ற ஸ்டலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சுமார் 40 சதவீத அளவுக்கே பெய்ததைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. மாநிலத்திற்கு கிடைக்கும் வருடாந்திர மழையளவில் 48 சதவீதமும், கடலோர மாவட்டங்களுக்கு 60 சதவீத மழையும் கிடைக்கும் வட கிழக்கு பருவமழை ஏறக்குறைய பொய்த்து விட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடிநீரும் இன்றி, விவசாயத்திற்கான பாசனத்திற்கு தண்ணீரும் இன்றி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தனி நபர் வருமானமும் கடுமையாக குறைந்து, அன்றாட செலவுகளுக்கே அவதிப்படும் சூழ்நிலை அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 89 அணைக்கட்டுகளில் மிக முக்கியமான 20-க்கும் மேற்பட்ட அணைகளின் நீர் மட்டம் தரைமட்டம் என்று கூறும் அளவிற்கு வறண்டு விட்டன. குறிப்பாக மேட்டூர், பவானி சாகர், வைகை, பாபநாசம், மணி முத்தாறு, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகள் "நீரில்லா மைதானம்" போல் காட்சியளிக்கின்றன.
இதே நிலை வீராணம் ஏரி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளிலும் நீடிக்கிறது. ஏரிகள், குளங்கள், அணைகள் வறண்டு காட்சியளிப்பதால் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குப் போய் விட்டது.
சென்னை உள்ளிட்ட புறநகரில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் ஆகியவற்றில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் கூட இல்லை என்ற நிலை எட்டியிருக்கிறது. வட கிழக்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
விவசாயிகள் எந்த விதமான விவசாயத்தையும் செய்ய முடியாமல் தங்கள் வாழ்க்கையில் சூறாவளி ஏற்பட்டு விட்டதாக உணருகிறார்கள். குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய இரு சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் மொத்தமாகவே படுத்து விட்டது.