நெற்களஞ்சியமே நிற்கதியாகி நிற்கும் அவல நிலையை உருவாக்கிய அதிமுக ஆட்சி
நெற்களஞ்சியமே நிற்கதியாகி நிற்கும் அவல நிலைமை அதிமுக ஆட்சியில் உருவாகி விட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
காவேரி டெல்டா மற்றும் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 11 விவசாயிகள் "வாடிய தங்கள் பயிரைக் கண்டும்" "வறண்டு போன தங்கள் நிலத்தைப் பார்த்தும்" கண் கலங்கி தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். இந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ஒரு லட்சம் ரூபாய் நிதியைக் கூட அதிமுக அரசு கொடுக்கவில்லை என்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது அதிமுக அரசு எந்த அளவிற்கு ஒரு ஈவு இரக்கமற்ற முறையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கிடையே வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல, பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பினால், ஏழை-நடுத்தர மக்களின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாகி விட்டது. கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தினை அலட்சியமாக செயல்படுத்தும் மத்திய அரசால் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறுவை பொய்த்துப் போய் இந்த ஆண்டு சம்பாவும் முழுமை அடையவில்லை. விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பயிர்கடன் உள்ளிட்ட எந்த சலுகைகளும், மான்யமும் போய்ச் சேராமல் அவதிப்படுகிறார்கள்.
இத்தனை இன்னல்கள் மக்கள் முன்பு அணி வகுத்து நின்றாலும், மாநிலத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி இது பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் கண்ணை மூடி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது. காவேரியிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இதனால் நவம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஏறக்குறைய 98 டி.எம்.சி. காவேரி நீர் இதுவரை வரவில்லை.