வறட்சி மாநிலமாக அறிவிக்க சட்டசபையை உடனே கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆந்திராவிலிருந்து சென்னைக் குடிநீருக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரும் வரவில்லை. குடிநீர் பஞ்சம் சென்னையின் பல பகுதிகளில் ஏற்கனவே வந்து விட்ட பிறகு கூட அதிமுக அரசு கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவும் இல்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிமுக அமைச்சர்கள் "இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு" முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதை விட்டால் அப்பல்லோ மருத்துமனை முன்பு நிற்க விரும்புகிறார்கள். ஆனால், வாக்களித்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுக அமைச்சர்களும் சரி, அதிமுக ஆட்சியும் சரி எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

புதிய கால்வாய்கள் கட்டுவது, கால்வாய்கள், ஏரிகள், அணைகள் தூர் வாருவது, தடுப்பணைகள் கட்டுவது- என கடந்த ஐந்து வருடங்களில் 1931.81 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக அதிமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவ்வளவு கோடி ரூபாய் செலவிட்ட பிறகும் ஏன் கடந்த வருடம் பெய்த கன மழை நீரை ஏரிகளிலும், குளங்களிலும், அணைகளிலும் சேமித்து வைக்க முடியவில்லை என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
இன்று தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், அணைகள் எல்லாம் வறண்டு கிடப்பதைப் பார்த்தால் கடந்த ஐந்து வருடத்தில் இந்த சுமார் 2000 கோடி ரூபாய் பணம் உண்மையிலேயே தூர்வாரும் பணிகளுக்கு செலவிடப்பட்டதா அல்லது செலவு கணக்கு மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. கன மழை பெய்த போது அந்த நீரை சேமித்து வைக்கவும் அதிமுக அரசு முன்வரவில்லை.
இப்போது வறட்சியில் மாநிலம் தவிக்கும் போது "தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவும் தயாராக இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே விவசாயிகளின் நலன், மாநிலத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம், அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை, பொய்த்துப் போன வடகிழக்கு பருவ மழை போன்ற அனைத்து காரணங்களையும் மனதில் கொண்டு தமிழகத்திற்கு உடனடியாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பி, வறட்சி நிலைமைகளைப் பார்வையிட்டு, தமிழகத்தை வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலை பற்றி விவாதித்து "தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க" சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications