நான் அடிக்கவே இல்லை- மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரை தாம் அடித்ததாக கூறுவதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் நேற்று மு.க.ஸ்டாலின் அதில் பயணம் செய்தார். அப்போது பயணி ஒருவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவின. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் பயணியை அறைந்த ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், தாம் அந்த பயணியை ஒருபோதும் அடிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு நேரில் ஜெயலலிதா செல்லவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இதனை திசை திருப்பவே ஜெயலலிதா இப்படி கூறுகிறார்
ஜெயலலிதாவின் அறிக்கை காழ்ப்புணர்ச்சி மிக்கது. வருந்தத்தக்கது. மெட்ரோ திட்டத்திற்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஜெயலலிதாவின் புளுகுமூட்டை. மெட்ரோ ரயில் கட்டணம் தொடர்பாக திமுக மீது ஜெயலலிதா பழி போடுவது அபாண்டம். மெட்ரோ ரயில் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக யாரும் ஒப்பந்தம் போடமாட்டார்கள் என்றார்.