சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்கள்! மீட்பு பணிக்கு ஒத்துழைப்பு! மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், ''ஆபரேஷன் காவேரி'' மீட்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் விவரம் வருமாறு;
சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருதாகவும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமர் கவனத்திற்குத் தாம் கொண்டுவர விரும்புவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணியானது, சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்களின் பாதுகாப்பாகத் திரும்புவதற்காகக் காத்திருக்கும் அனைத்து இந்தியர்களின் குடும்பங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சூடானிலிருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் தமது கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications