ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? இன்று அறிவிக்கப்படும் - ஸ்டாலின்
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது. இதையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி திமுக வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர் கே நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் களம் படுபரப்படைந்துள்ளது. அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டு பக்கம் பிரிந்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.
இதனிடையே திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் விருப்பமனுக்கள் பெறும் நாள் நிறைவடைந்தது. 25 ஆயிரம் ரூபாய் கட்டி விருப்பமனு அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது .
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். இதில் ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், சுந்தர்ராஜன், சுவிஸ் ராஜன், காமராஜர் பேத்தி மயூரி, ஏ.டி.மணி, ரோஸ் பொன்னையன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நேர்காணல் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். நேற்று நடத்தப்பட்ட நேர்காணல் முடிவுகளுடன் கட்சி தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளரை அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் தி.மு.க. வெற்றி பெறும். கம்யூனிஸ்ட் மட்டுமல்ல ஜனநாயகத்தை காக்க அனைவரையும் வரவேற்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.