2ஜி தீர்ப்பால் கருணாநிதி மகிழ்ச்சி!... கோபாலபுரத்தில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!!
2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியுடன் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
சென்னை : 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியாகி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கோபாலபுர இல்லத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி மகிழ்ச்சியாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார்.

இதையடுத்து திமுகவினர் உற்சாகமடைந்தனர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிலையில் மறைந்த சற்குணபாண்டியன் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதவியை கனிமொழிக்கு வழங்குவது குறித்து பொதுச் செயலாளர் க.அன்பழகனுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2ஜி தீர்ப்பு குறித்து நானும் பேராசிரியர் அன்பழகனும் கருணாநிதிக்கு எடுத்துரைத்தோம். 2ஜி தீர்ப்பால் கருணாநிதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

என் கையை பிடித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அநீதி வீழ்ந்துள்ளது, அறம் வென்றுள்ளது என்பதே இந்த தீர்ப்பின் சாராம்சம் ஆகும். ஆர்கே நகருக்கும் 2ஜி தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்றார் ஸ்டாலின்.
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கருணாநிதி, அநீதி வீழ்ந்தது, அறம் வென்றது என்று எழுதி காட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications