பொதுவுடமைவாதிகளுக்கு பரதனின் மரணம் பேரிழப்பு.. ஸ்டாலின், விஜயகாந்த் அஞ்சலி
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதனின் மரணம் பொதுவுடமைவாதிகளுக்கு பேரிழப்பாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் பரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்ட பரதன் அவர்கள் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் வாதாடிய இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றியுள்ளார்.
தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஏபி பரதன் அவர்களின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
விஜயகாந்த்
விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 16 ஆண்டு காலம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் மற்றும் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். சிறந்த சமூக ஆர்வலராகவும் இருந்தவர்.
தொழிலாளர்களுக்காகவும், ஏழை, எளியவர்களுக்காகவும், பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். இந்திய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனைகளுக்கு இவரின் பங்கு முக்கியமானதாகும். அரசியலில் எளிமையாகவும், நேர்மையாகவும் தன்னலம் பாராமல் தொண்டாற்றியவர்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் தோழமை பாராட்டியவர். இவ்வளவு பெருமைகளை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (02.01.2016) இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். அவரது நினைவும், புகழும், பெருமையும் என்றென்றும் இந்திய அரசியலில் நிலைத்துநிற்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.