கனிமொழிக்கு எஸ்.. அழகிரிக்கு நோ.. பிரச்சனைக்கு காரணமான அந்த ஒரு பதவி.. விடாப்பிடி ஸ்டாலின்!
திமுக கட்சியில் உள்ள பொருளாளர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியே அழகிரியின் திடீர் கோபத்திற்கு காரணம் என்று திமுக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
Recommended Video
சென்னை: திமுக கட்சியில் உள்ள பொருளாளர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியே அழகிரியின் திடீர் கோபத்திற்கு காரணம் என்று திமுக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இன்று காலை மு.க அழகிரி சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார்.
இது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி தமிழகம் முழுக்க எழுந்துள்ளது.
திமுகவில் மாற்றம்
திமுகவில் சில அதிரடி மாற்றம் ஏற்பட உள்ளது. ஏற்கனவே திமுகவின் தலைவராக விரைவில் ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. மேலும் திமுகவிற்கு புதிய பொருளாளரும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து நாளை நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாகிறது.
அழகிரி கேட்டார்
இந்த பொருளாளர் பதவியைதான் அழகிரி திமுகவிடம் கேட்டுள்ளார். தலைவர் பதவியோ, வேறு பதவியோ வேண்டாம், பொருளாளர் பதவிதான் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் தன்னை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும், இதற்காக செயற்குழுவில் சரியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதான் திமுகவில் முதலில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி பதவி
ஆனால் இதே பதவியை கனிமொழி கேட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி திமுகவின் முக்கிய தலைவர்களிடம் இந்த பதவி குறித்து கேட்டுள்ளார். அதேபோல் மெரினா கருணாநிதியை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் கனிமொழி பெரிய அளவில் உதவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு அந்த பதவி வேண்டும் என்று கூறியதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கிறது.
எதிர்ப்பு
திமுகவில் பெரும்பாலான உறுப்பினர்கள் கனிமொழிக்கு இந்த பதவி செல்வதில் பிரச்சனை இல்லை என்றுள்ளனர். தேசிய அளவில் கனிமொழி முக்கியமான நபர், அதேபோல் ஸ்டாலினுக்கு அடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர், அடுத்த தலைவராகும் தகுதி உள்ளது என்று கட்சியினர் கூறியுள்ளனர். ஆனால் அழகிரி கட்சிக்கு வந்தால், மற்ற பெரிய உறுப்பினர்களை ஓரம்கட்ட பார்ப்பார், அது குழப்பத்தில் முடியும் என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் என்ன முடிவு
இந்த நிலையில்தான் ஸ்டாலின் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார். அழகிரிக்கு விடாப்பிடியாக பதவி கொடுக்க கூடாது என்ற முடிவில் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. கனிமொழிக்கு பதவி கொடுப்பதில் பிரச்சனை இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அழகிரியை கட்சியில் கூட சேர்க்கும் எண்ணத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கருணாநிதி அஞ்சலி கூட்டமாக நடத்தப்பட இருந்த திமுக செயற்குழு கூட்டம் அழகிரியின் பேச்சால் முக்கியமான முடிவெடுக்கும் கூட்டமாக மாற உள்ளது.