கார்ப்பரேட் சாமியார் ஜக்கி நிகழ்ச்சிக்கு மோடி வந்தால் போராட்டம்... எம்.எல். கட்சி எச்சரிக்கை
கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரமதர் மோடி வருவதற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோவை: இயற்கை வளத்தை கொள்ளையடித்து வரும் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி, கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கோவையில் ஆதிவாசிகளின் நிலங்கள் அபகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, இயற்கை வளங்களை சுரண்டல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். அவர் தலைமையில் நடைபெறும் சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஆரோக்கியமான முன்னுதாரணம் அல்ல. எனவே, இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள கூடாது. நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருவது உறுதியானால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் சார்பில் வருகிற 22 அல்லது 23ம் தேதி கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக பொறுப்பேற்றுள்ளது மக்கள் விருப்பத்திற்கும் அறநெறிகளுக்கும் எதிரானது. அதிமுகவின் முன்னாள், இன்னாள் பொதுச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறுவதே அவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது என்று குமாரசாமி குற்றம்சாட்டினார்.