சென்னையா.. அயயோ... மிரண்டு ஓடிய ம.ந.கூ. -தேமுதிக - தமாகா தலைவர்கள்!
சென்னை: சென்னை நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தலைவர்கள் விரும்பவில்லையாம். இருப்பினும் வலியுறுத்தியும், கெஞ்சியும் தொகுதிகளைப் பங்கீடு செயது கொண்டுள்ளனராம்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 3 தொகுதிகளை மட்டுமே இவர்கள் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளனர். மற்ற 13 தொகுதிகளையும் இவர்கள் யாருமே கேட்கவில்லையாம்.
இதிலிருந்தே இவர்களது பவுசு வெட்டவெளிச்சமாகியுள்ளது. என்ன கொடுமை என்றால் முதல்வர் வேட்பாளரைக் கொண்டுள்ள தேமுதிக சென்னையில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பவில்லை என்பதுதான். கடைசியில் மதிமுக மீது பல தொகுதிகளை சுமத்தி விட்டு விட்டனர்.
கூட்டணியை எளிதாக ஏற்படுத்தி விட்டாலும் கூட தொகுதிப் பங்கீடுதான் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா இடையே பெரும் தலைவலியாகப் போய் விட்டது. குறிப்பாக மதிமுகதான் மண்டை காய வைத்து விட்டதாம். அடுத்து தேமுதிகவும் கொஞ்சம் பிடிவாதம் காட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் நிறைய இறங்கி வந்ததாம். அதேபோல கம்யூனிஸ்டுகளும் கூட அதிக டென்ஷனைத் தரவில்லையாம். ஜி.கே.வாசனும் கூட சிக்கல் வராத அளவில் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொண்டு விட்டாராம்.
இருப்பினும் சென்னையில உள்ள தொகுதிகளைப் பங்கு போடுவதுதான் சிக்கலாகியுள்ளது. அதாவது பல தொகுதிகளில் யாருமே போட்டியிட விரும்பவில்லையாம். நீங்க போட்டியிடுங்க என்று கூறி மாறி மாறி தள்ளி விட்டுள்ளனர்.
கடைசியில் பார்த்தால் 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் யாருமே போட்டியிட விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணி தலைவர்கள் தங்களுக்குள் வலியுறுத்தியும், கெஞ்சியும் இந்த தொகுதிகளையும் பங்கிட்டுக் கொண்டுள்ளனராம்.
அடடா.. சென்னை என்றால் இவ்ளோ பயமா??