2 நாட்களில் 5 இடங்களில் மோடி கூட்டம்.. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக!
நாகர்கோவில்: தமிழக சட்டசபைத் தேர்தலில் பிரதமர் மோடி பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட 5 இடங்களில் பிரசாரம் செய்து பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. ஓரிரு சிறு கட்சிகளே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க கிடைத்தன. அதை வைத்து தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக.
சுரத்தே இல்லாமல் பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க தமிழகம் வருகிறார்.

5 இடங்களில்...
பிரதமர் மோடி மொத்தம் 5 இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார். கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் அவர் பேசவுள்ளாராம்.

ஏழுசாட்டுபத்து...
கன்னியாகுமரி அருகே ஏழுசாட்டுபத்து என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த இடத்தை இன்று காலை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

விரைவில் விவரம்...
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமரின் சுற்றுப்பயண விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 8ம் தேதி அவர் கன்னியாகுமரி வருகிறார். 2 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பார்.

நாங்கள் வெல்வோம்...
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அடிமையாக்கிய திராவிடக் கட்சிகள்...
தமிழக இளைஞர்களை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மதுவுக்கு அடிமையாக்கி விட்டன. இலவசங்களை கொடுத்து மக்களை கொத்தடிமையாக வைத்து இருக்கிறார்கள்.

அதிமுக ஆதரவு அதிகாரிகள்...
தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்னுக்கு சென்று விட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கலாம். மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறி இருப்பதாக ஜெயலலிதா கூறுவதில் உண்மையில்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications