4 மாவட்டங்களுக்கு பயன் தரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை.. திறந்து வைத்தார் மோடி
கோவை: கோவை சி்ங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, கவர்னர் ரோசைய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2009ம் ஆண்டு சென்னை மற்றும் கோவையில் புதிதாக மருத்துவ கல்லுாரி கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கோவை வரதராஜபுரத்தில், 520 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை திறந்து வைக்க இன்று கோவை வந்தார் பிரதமர் மோடி. மாலை 4 மணியளவில் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைத்தார்.
மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை
புதிய இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ மனையில், புறநோயாளிகள், உள்நோயாளிகள், 24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றுக்கு, தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து வசதிகளும், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏழு லட்சம் சதுர அடி பரப்பில், நான்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரியுடன் இணைந்த இம்மருத்துவமனையில், 31 துறைகள் உள்ளன. இதில், 17 துறைகள் பொதுவானவை; 14 சிறப்பு மருத்துவ துறைகள். புறநோயாளிகள் பிரிவுடன், அவசர மருத்துவ சேவைப்பிரிவும் செயல்படும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
24 மணிநேர சிகிச்சை
இப்பிரிவில், சிகிச்சை பெற்றவர்களை கண்காணிக்க, சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவில், நான்கு தளங்களில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்படும் வகையில், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவும் உள்ளது.
4 மாவட்ட தொழிலாளர்கள்
மருத்துவமனையில் உள்ள அனைத்து, அறுவை சிகிச்சை அரங்குகளும் நோய் தொற்றை தவிர்க்கும் வகையில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளிக்கும் இடமாக, இம்மருத்துவமனை அமைந்துள்ளது.
பொன். ராதாகிருஷ்ணன்
மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஒரு லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட தொழிலாளர்களுக்கு பயன்தரும் என்றார்.