வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர்... கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்த அனல் மின் நிலைய ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரம் ஓய்ந்த பிறகு தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பணியை தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 350 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டும் இதுவரை அவர்கள் வாகன சோதனையில் மட்டும் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினர் பணம் கொடுப்பதாக புகார் அளித்தாலும் காலதாமதமாகவே அந்த பகுதிக்கு செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60வது வார்டு தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் அனல் மின் நிலைய அதிமுக தொழிற்சங்க துணை செயலாளராகவும் இருந்து வருகிறார். அவர் நேற்று இரவு கேம்ப் 1 மற்றும் கேம்ப் 2 பகுதியில் வீடு வீடாக ஓட்டுக்கு ரூ.250 விதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த வட்ட செயலாளர் கருணாமூர்த்தியும் உடன் இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். மெதுவாக வந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு பணம் வழங்கிவிட்டு நின்றிருந்த முத்துராஜை மட்டும் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை கைப்பற்றினர். இதற்கிடையே அதிகாரிகள் வருவதை பார்த்த கருணாமூர்த்தி உள்ளிட்ட அதிமுகவினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.
முத்துராஜை பறக்கும்படை அதிகாரிகள் தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர். முத்துராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பட்டியலை வாங்கி யார், யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications