கேரளாவில் பரவும் குரங்குக் காய்ச்சல்.. பீதியில் தமிழக மக்கள்!
கரூர்: கேரள மாநிலம், திருவனந்தபுரம், வயநாட்டில் கடந்த சில மாதங்களாக குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குரங்குக் காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோயின் தீவிரம் குறையவில்லை.

இந்நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பத்தேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உப்பாடி பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்தார்.
இதையடுத்து கடந்த 2 மாதங்களில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடமே நவம்பர் மாதம் 30ம் தேதி கேரளா மாநிலம், நிலம்பூர் பகுதியில் ஏற்பட்ட குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாநில எல்லையில், தமிழக சுகாதாரத் துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கேரளா மாநிலம், நிலம்பூர் அருகே, கிராமங்களில், குரங்கு காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி வந்தது. மேலும் நாகமலை பழங்குடியினர் கிராமத்தில், கடந்த ஒரு வாரத்தில், இரண்டு குரங்குகள் காய்ச்சல் தாக்கி இறந்துள்ளன.
இக்கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர் ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் நோய் தாக்கி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில், பறவை காய்ச்சல் நோயை அடுத்து, குரங்கு காய்ச்சல் பரவி வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு எல்லைப்பகுதியில், பழங்குடியின கிராமங்களில், சுகாதாரத்துறை இணை இயக்குனர், டாக்டர் பானுமதி உத்தரவையடுத்து, மருத்துவ குழுவினர், பழங்குடியினருக்கு தடுப்பூசி போடும் பணியை அரசே துவக்கியது. மேலும், கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை சார்பில், தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி அடங்குவதற்குள் குரங்கு காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல் வலி, மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படும். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தெய்வீகத் தலங்களான திருத்தணி, பழனி, கரூர் மாவட்டம் ஐயர் மலை, மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல ஆலயங்களில் குரங்குகள் அதிகமாகவே காணப்படுகிறது.
அந்த குரங்குகளை கண்டு தற்போது பக்தர்கள் அச்சப்படுகின்றனர். ஏனென்றால் குரங்கு காய்ச்சல் வந்து விடுமோ என்றுதான். எது எப்படியோ தமிழக சுகாதாரத்துறைக்கு இம்முறை போறாத காலமாகவே உள்ளது. விழித்துக் கொண்டால் சரி.












Click it and Unblock the Notifications