தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் - 1000க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை: தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு திட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் 30 சத்துணவு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி, மாநில செயலாளர் எஸ்.சொர்ணம், சென்னை மாவட்ட தலைவர் கேசவன் ஆகியோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
முறையான அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது, உடனே கலைந்து செல்லுங்கள் என்று சத்துணவு ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து, கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே சாலை மறியல் செய்ய முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி, "சத்துணவு திட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 3,500ம், ஒட்டுமொத்த ஓய்வூதியம் ரூபாய் 2 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
ஆனால் தமிழக அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி தான் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இன்று திருச்சியில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதேபோல தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆங்காங்கே பெண்கள் மயங்கி விழுந்தனர்.
திருப்பூர், தேனி ஆகிய இடங்களில் தலா 2 பெண்களும், திண்டுக்கல்லில் ஒரு பெண்ணும் மயங்கி விழுந்தனர். அவர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார்.
700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.சத்தி, மாவட்டச் செயலாளர் துரை.அரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் பெ.அன்பு, அ.மலர்விழி, இரா.தங்கராஜ், வெ.அன்னபூரணம், சி.சித்திரைவேல், கி.கணேசன், பொ.சிங்காரம் உட்பட 393 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications