மதுவிலக்குப் போராட்டம்: தமிழகம் முழுவதும் 2500 பேர் கைது... முன்னெச்சரிக்கையாக 2300 பேர்!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய போது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தில் கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளும் அடித்து நொறுக்கப் பட்டன. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தாம்பரத்தில் 300 பேர் கைது...
சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் மதுக்கடையை மூடக்கோரி காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், நகர தலைவர் ரூபிமனோகரன், தே.மு.தி.க. நகர செயலாளர் செழியன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் யாகூப், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு உள்ளிட்டோர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 300 பேர் ஊர்வலமாக வந்தனர். இவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரில் 50 பேர்...
இதேபோல், திருவொற்றியூர் அஜாஸ் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாதர் சங்கத் தலைவி பாக்யம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர்.
ஆவடியில் 30 பேர்...
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி துணை தலைவர் தணிகைவேல் உள்பட 30 பேர் சென்னை ஆவடி காமராஜர் நகர் 3-வது தெருவில் உள்ள மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 2500 பேர்...
இவ்வாறு தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2500 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2300 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பேருந்துகள் மீது தாக்குதல்...
இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 33 பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் இரண்டு கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை...
போராட்டங்கள், டாஸ்மாக் மீது தாக்குதல் உள்ளிட்டவை நடந்தபோதும், இன்றைய மதுவிலக்கு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.