ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் மருந்து கடைகள் மூடல்; பொதுமக்கள் கடும் அவதி
சென்னை: ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய அளவில் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 மருந்து கடைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகி நடராஜ் கூறியுள்ளார். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் போதை மருந்துகள் மற்றும் கலாவதியான மருந்துகளின் நடமாட்டம் அதிகரிக்கும் ஆபத்து இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஆன்-லைன் வர்த்தகம், ஊக்கமருந்து, கருத்தடை மருந்து, அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தவறான முறையில் பயன்படுத்த வழி வகை செய்து கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை ஏற்பட்டால் ஆன்-லைனில் வாங்கிய மருந்துகளை மாற்றவோ, திரும்ப அளிக்கவோ முடியாது. எனவே எங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் தமிழகத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்படும்.
200 கடைகள் திறப்பு
கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு கடைகளை திறந்து மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே மருத்துவமனையில் இருக்கும் மருந்து கடைகளை மூட வேண்டாம் என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்தவகையில் சென்னையில் மட்டும் 200 கடைகள் திறந்து இருக்கும்.
அம்மா மருந்தகங்கள்
அத்துடன் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில், மருந்து வணிகர்கள் சங்கத்தின் 60 உறுப்பினர்களின் செல்போன் எண்களை கொடுத்துள்ளோம். யாருக்கு மருந்து தேவைப்படுகிறதோ அவர்கள் உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், உடனடியாக கடைகளை திறந்து மருந்துகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார். இந்த நிலையில், பொதுமக்கள் நலன்கருதி திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் இயக்கப்படும் மருந்துக் கடைகள் வழக்கம்போல திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆர்பாட்டம்
ஆன் லைன் வர்தகத்தைக் கண்டித்து காலை 11 மணி அளவில் சென்னை வள்ளூவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆன்-லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யபடுவதை தடுக்கக் கோரி முழக்கமிட்டனர். ஆர்பாட்டத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று ஆதரவு அளித்தார். ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
கோவை - சேலத்தில்
கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிப்போம் என்று தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகி நடராஜ் கூறியுள்ளார்.விழுப்புரம், கரூர், கடலூர் மாவட்டங்களிலும் மருந்துக்கடை உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலத்திலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு போராட்டம்
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 500க்கும் அதிகமான மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருந்தக உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தினர்.
கரூரில் ஆர்பாட்டம்
கரூர் மாவட்டத்தில் 650க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் எனக்கூறி தஞ்சையில் மருந்துக் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்பட்டது. மதுரையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications