தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ. மழையும், சாத்தான்குளத்தில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வுநிலையாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். இது வடமேற்கு திசையில் சென்று வடமேற்கு வங்கக் கடலில் இருக்கும்.
பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாட்டங்களில் சில இடங்களிலும் இன்று மழை பெய்யும்.
சென்னையில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் அல்லது இடியுடன் கூட மழை பெய்யும் என்றார்.