நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட கடும் எதிர்ப்பு... அதிர்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் தாம் போட்டியிட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் புதுவை முதல்வர் நாராயணசாமி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம்.
புதுவை முதல்வராக பெரும் சர்ச்சைகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டார் நாராயணசாமி. ஆனால் புதுவை மாநில காங்கிரஸ் தலைவரான நமச்சிவாயம் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் ஒருவழியாக முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் நாராயணசாமி. அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. இதனால் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயம் நாராயணசாமிக்கு உண்டு.
அவருக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுத்தர எம்.எல்.ஏ. ஜான்குமார் முன்வந்திருக்கிறார். ஆனால் ஜான்குமாரின் மனைவி மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள், நாராயணசாமிக்கு தொகுதியை விட்டுத்தரக் கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கூடங்குளம் போராட்ட விவகாரத்தில் கிறிஸ்துவ அமைப்புகள் மீது அவதூறுகளை வீசியவர்; வெளிநாட்டு நிதிகளை என்ஜிஓ அமைப்புகள் பெற தடை விதித்தவர் என ஏகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் நெல்லித்தோப்பு தொகுதி கிடைக்குமா கிடைக்காதோ என அதிர்ச்சி அடைந்துபோயுள்ளாராம் முதல்வர் நாராயணசாமி.
அதேபோல் ஜான்குமார் எம்.எல்.ஏ.வும் என்ன செய்வது எனத் தெரியாமல் கை பிசைந்து கொண்டிருக்கிறாராம்.