35 ஆண்டுகளுக்குப் பின்னர் 140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு! தமிழகத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 140 அடியை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக இருந்தது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 140 அடியை எட்டியது. 35 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியுள்ளது.
அணையின் தற்போதைய நீர் இருப்பு- 7,126 மில்லியன் கன அடி; அணைக்கு நீர்வரத்து 1,916 கனஅடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 456 கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது
தற்போதைய நிலையில் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது குறித்து தேனி, இடுக்கி ஆகிய இருமாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.