வைகோவை ஸ்டாலின் தேடிப் போய்ப் பார்த்த படம் முரசொலியில் (மட்டும்) எப்படி "மிஸ்" ஆனது?
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேடிப் போய்ப் பார்த்துப் பேசிய படத்தை அத்தனை ஊடகங்களும் தவறாமல் போட்ட நிலையில், திமுகவின் முரசொலியில் மட்டும் அந்தப் படம் இடம் பெறவில்லை.
இது தெரிந்து நடந்ததா அல்லது திட்டமிட்டதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
டாக்டர் ராமதாஸ் பேரன்- பேத்தி திருமணத்தின்போதுதான் இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இந்த சந்திப்பு, இருவரும் அளித்த பேட்டிகள், புகைப்படம் என எதுவுமே முரசொலியில் இடம் பெறவில்லை.
ராமதாஸ் பேத்தி கல்யாணம்
டாக்டர் ராமதாஸ் பேத்தி- பேரன் திருமணத்தின்போது நடந்த நிகழ்வுகள் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், கிசுகிசுப்புகளையும் கிளப்பி விட்டு விட்டன.
சூடான வாதம், விவாதம்
திமுகவுடன் மறுபடியும் வைகோ கூட்டணி வைப்பாரா, வைத்தால் எத்தனை சீட் கிடைக்கும், பாமக மீண்டும் லைம்லைட்டுக்கு வருமா என்றெல்லாம் பேச்சுக்கள், விவாதங்கள் சூடு பிடித்தன.
ராமதாஸ், வைகோவின் அந்தர்பல்டி பேச்சுக்கள்
ஆனால் டாக்டர் ராமதாஸும், வைகோவும் இந்தப் பேச்சுக்களை அப்படியே மாற்றிப் போட்டு விட்டனர். கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை என்று கூறி விட்டார் வைகோ. ராமதாஸோ, திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி கிடையாது, தனிக் கூட்டணிதான் என்று கூறி விட்டார்.
வைகோ, ஸ்டாலின் சந்திப்பு
முன்னதாக மு.க.ஸ்டாலினும், வைகோவும் கல்யாண வீட்டில் சந்தித்தது, பேசியது, ஒன்றாக மதுரைக்கு விமானத்தில் போனது எல்லாமே ஊடகங்களில் பெரிதாக வந்திருந்தது. புகைப்படங்களும் களை கட்டியிருந்தன.
தேடிப் போய்ப் பார்த்த ஸ்டாலின்
கல்யாண வீட்டுக்கு வந்திருந்த வைகோவை, ஸ்டாலின்தான் தேடிப் போய்ப் பார்த்தாராம். இதுதான் இந்த சந்திப்பின் ஹைலைட்டாகும்.
முரசொலியின் தனி ஆவர்த்தனம்
ஆனால் முரசொலி மட்டும் தனி ஆவர்த்தனம் செய்வது போல, வைகோவை, ஸ்டாலின் தேடிப் போய்ப் பார்த்த விவரத்தை, செய்தியை, படத்தை என எதையுமே போடவில்லை. மண மேடையில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் மணமக்களை வாழ்த்தியதை மட்டுமே போட்டிருந்தனர்.
தெரிந்தா.. தெரியாமலா
இது தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா என்பதுதான் புரியவில்லை பலருக்கும்.