“என் பெயர் ஸ்டாலின்.. உங்களில் பாதி”.. மார்க்சிஸ்ட் மாநாட்டு அரங்கத்தை அதிரவிட்ட முதல்வர் ஸ்டாலின்
மதுரை: "தூங்கா நகரமான மதுரை இன்று சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. இதில் முதலில் மகிழ்ச்சி அடைபவன் நான் தான்." என முதல்வர் ஸ்டாலின், மதுரை சிபிஐஎம் கட்சி மாநாட்டில் பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 24வது அகில இந்திய மாநாட்டை நேற்று ஏப்ரல் 2 ) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் இரண்டு தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் மாநாட்டில் "கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கத்திற்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் "இன்று தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதை பார்த்து முதலில் மகிழ்ச்சி அடைபவன் நான் தான். திமுக கொடியில் உள்ள பாதி சிவப்பு; கொடியில் மட்டுமல்ல; எங்களில் பாதி பொதுவுடைமை இயக்கம். திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும், உள்ள நட்பு கருத்தியல் சார்ந்தது. தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
உலக மாமேதை கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துவிட்டு, உங்களில் பாதியாக இம்மாநாட்டிற்கு வந்திருக்கக்கூடிய, என் பெயர் ஸ்டாலின். நமது பயணமும் பாதையும் மிக நீண்டது. 2019 ஆம் ஆண்டு முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். நாம் யாரை எதிர்க்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம்.
நாம் பிரிந்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் சில வெளி நபர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. யாரும், அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்துக் கொண்டு, கட்சி மாறச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறீர்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் எனபதுதான் அவர்களின் நோக்கம். மக்கள் நலனைக் காக்க நாம் ஒன்றுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசத்தை எதிர்ப்போம்.
கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. ஒன்றிய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம். மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும். அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதினால்தான் கூட்டாட்சி மலரும்.
மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளை பறிக்க பார்க்கிறது. பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறார்கள். ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையை எடுத்துக்கொண்டனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிறைவேற்ப்படும் சட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.
வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். இந்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்பது தான். அதனால் தான் ஒன்றிய அரசு என்கிறோம். சட்டத்தில் இல்லாததை கூறவில்லை. இதையே அவர்களால் தாங்க முடியவில்லை. அதிகார பரவலாக்கலை அவர்கள் விரும்பவில்லை.
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு. இதனால் 25 ஆண்டுகளுக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மாநில சுயாட்சி எங்கள் உயிர் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக மத்திய அரசு இருக்கிறது. மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.
மத்திய - மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த சர்க்காரியா, பூஞ்சி கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என 2012-ல் முதல்வராக இருந்த மோடி கோரிக்கை வைத்தார். மூன்றாம் முறையாக பிரதமராகி உள்ள மோடி அவர்களே, அந்த கோரிக்கையை நிறைவேற்ற நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இதற்கு தமிழகத்துக்கு வரும் போது பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்." என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications