வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள்.. விசாரணையை தொடங்கினார் மயிலாப்பூர் துணை கமிஷனர்!
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திய போது அமைச்சர்கள் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வருமான வரித்துறையினரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது அவர்களை அமைச்சர்கள் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் வருமான வரித்துறையினரிடம் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணையை தொடங்கியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7, 8ஆம் தேதிகளில் வருமான வரித்துறையினர் திடீர்ரெய்டு நடத்தினர். அப்போது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பெண் ஊழியரை மிரட்டியதாகவும் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் புவன்குமார் போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணையை தொடங்கியுள்ளார். வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அமைச்சர்கள் மிரட்டியது குறித்து அதிகாரிகளிடம் அவர் விளக்கம் கேட்டார்.