ஏமாற்றம்.. மனவேதனை.. நீதி எம்மை கைவிட்டுவிட்டது.. எம்எல்ஏ நட்ராஜ் குமுறல்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததால் மனவேதனையும் ஏமாற்றத்தை ஏற்பட்டுள்ளதாக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறாததால் மக்களை போலவே தாமும் மிகுந்த மனவேதனைக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளதாக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் நட்ராஜ் வெளியிட்டுள்ள பதிவு: சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயக விரோத அரசியலை நினைவுப்படுத்துகிறது. புதிய பாதையில் செல்வதற்கான வாய்ப்பு அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்தது. ஆனால் மிகப் பெரிய வாய்ப்பை அவர்கள் தவற விட்டு விட்டார்கள்.
எம்எல்ஏக்கள் நினைத்திருந்தால் தங்களின் சிறப்பான நடவடிக்கை மூலம் இளைஞர்களின் கவனத்தை அவர்கள் ஈர்த்து இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை தவற விட்டு விட்டனர். சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஜனநாயக விரோதமாக நடைபெற்றது. இது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் உத்தரகாண்ட் நிகழ்வை விட மிக மோசமாக இருந்தது.
மக்கள் விரோதம்
சட்டசபையில், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கட்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினேன். மறைந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரம் 'மக்களால் நான் மக்களுக்காகவே நான் ' என்பது தான். எனவே, மக்களின் எண்ணங்களை தான் சட்டசபையில் பிரதிபலிக்க வேண்டும்.
எம்எல்ஏக்களின் மக்கள் விரோத செயலால்..
ஆனால் எம்எல்ஏக்களின் மக்கள் விரோத செயலால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சட்டசபை என்பது மக்களின் பிரச்னைகள் பற்றி பேச வேண்டிய சபை. எனவே அவர்களின் கருத்தை கேட்டு அதன் பிறகு ஓட்டெடுப்பை நடத்தலாம் என்று கூறினேன்.
அவசரத் தீர்மானம்
எங்கள் கருத்துக்களை உன்னிப்பாக கேட்ட சபாநாயகர் சபையை ஒத்தி வைக்க மறுத்து விட்டார்; ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என கூறி விட்டார். அதற்கு பதில் அவசர அவசரமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.
வெற்றி அறிவிப்பு
கடைசியாக, 11 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு ஓட்டு போட்டதாக ஆளுநர் தெரிவித்தார். 122 பேர் பழனிசாமி அரசை ஆதரித்து ஓட்டு போட்டனர் என்றும், இதன் மூலம் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனால், இந்த ஓட்டெடுப்பில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
பாயும் நடவடிக்கை
கட்சியின் கொறடா உத்தரவை நான் மீறியதால், நடவடிக்கை பாயும் என்ற சூழல் உள்ளது. இருப்பினும், என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. மக்களின் எண்ணங்களை நான் பிரதிபலித்தேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன். பதவி என்பது எனக்கு பெரிதல்ல. சரியான விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டும்; மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் நான் ஒரு மக்களின் சேவகன். மக்களை விட நான் அதிகாரம் மிக்கவன் என ஒரு போதும் நினைக்க மாட்டேன் என்று நட்ராஜ் கூறியுள்ளார்.