வைகோ டிரைவரின் மரணத்தில் ‘மர்மம்’.. முகத்தில் காயம் ஏன்? உடன் இருந்த நண்பர்கள் மிஸ்ஸிங்?
நெல்லை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் டிரைவராக பணியாற்றிய துரை நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது முகத்தில் காயங்கள் இருப்பதால், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், கடந்த பல ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் சின்னதுரை என்கிற துரை. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த இவர், வைகோ சொந்தமாக அம்பாசிடர் கார் வைத்திருந்த காலத்திலிருந்து தற்போது ஃபார்ச்சூனர் கார் வரையிலும் அவருக்கு ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை தனியாக ரியல் எஸ்டேட் தொழில் துவங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியில் உள்ள தனது நண்பரான மருத்துவர் ஒருவரின் தோட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது முகத்தில் காயங்களுடன் அவர் மயங்கிக் கிடப்பதாக துரையின் மகள் மற்றும் மருமகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் விரைந்து சென்று துரையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துரை, பல் மருத்துவர் மற்றும் வேறு ஒரு நபர் என மூன்று பேர் இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போதுதான் மயங்கி கீழே விழுந்து முகத்தில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதில் சேரில் இருந்து தவறி விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டு உயிர் இழந்திருக்கலாமா அல்லது மது அருந்தியவர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டு கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்தாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
துரையோடு இருந்த பல் மருத்துவர் மற்றும் மற்றொருவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும், விரிவான விசாரணைக்குப் பிறகே துரையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications