போரூர் கட்டிட விபத்து மீட்புப் பணியில் மத்திய அரசும் ஈடுபட வேண்டும்... சந்திரபாபு நாயுடு கோரிக்கை
சென்னை: போரூர் கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கையாக மத்திய அரசும் மீட்புப் பணியில் இணைய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில் போரூர் மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. முழுவதும் கட்டுமானப் பணிகள் நடந்து முடியாத அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் இடிபாடுகளுக்கிடையே ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மீட்பு பணி முழுவதுமாக முடிவடைய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
இடைபாடுகளில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 18 தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா பிரியதர்ஷனி தலைமையிலான குழு ஒன்று சென்னையில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திர மந்திரி சீதாராகவராவும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், விபத்தில் பலியான ஆந்திர மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் சந்திரபாபுநாயுடு. அதனைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் காயமடைந்து போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘மவுலிவாக்கம் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மத்திய அரசும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.