சுங்க கட்டணம் வசூலிப்பதா? உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் நாதகவினர் ஆவேசம்.. மறியலால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட சேலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரும்பி சென்ற போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான நாதக நிர்வாகிகள் வந்தனர். இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், பாண்டியர், சோழர், சேரர் மூவேந்தர் ஒன்று சேர்ந்து போரிட்டு இருந்தால், உலகம் தமிழனின் உலகம். ஒருவரும் எதிர்நின்றிருக்க முடியாது. மன்னராட்சி காலத்தில் என்ன நடந்ததோ, மக்களாட்சி காலத்திலும் அது தான் நடக்கிறது. காந்தியை, நேதாஜியை மறந்து விட்டார்கள்.

தமிழ் மக்கள் விழித்து கொள்ளவில்லை என்றால், இந்த இனத்தை பாதுகாக்க இனி யாரும் வரமாட்டார்கள். நம்மை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பது நாம் அனைவருக்குமே தெரியும். நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும். அதில் நமது லட்சியத்தை மரமாக்க வேண்டும். தலைவன் இல்லாத நாடாக இது தட்டுக்கெட்டு நிற்கிறது.

ரஜினியும், நானும் இரண்டரை மணி நேரம் பேசினோம். என்ன பேசினோம் என்பதை பற்றி நானும், அவரும் சொல்ல தேவையே இல்லை. அவரை சந்தித்ததால் நான் சங்கி ஆகிவிடுவேனா? உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூப்பிட்டு பக்கத்தில் வைத்து கொள்கிறீர்கள். நான் சந்தித்து பேசியதும் கதறுகிறீர்கள். ஏனென்றால், ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார்" என்று கூறினார்.

நாம் தமிழர்கட்சி நிர்வாகிகள் மாவீரர் நாள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நேற்று இரவு மீண்டும் அவரவர் ஊருக்கு திரும்பி சென்றனர். அப்படித்தான் சேலம் மாவட்ட நாதகவினர் விழுப்புரம், உளுந்தூர்பேட்டையை தாண்டி கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதகவினர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சுங்கச்சாவடி ஊழியர்களின் பதில் திருப்தி அளிக்காததால், ஒரு கட்டத்தில் நாதகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட நாதக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications