மோடி புயலும்.. நாடா மழையும்.. ஏடிஎம் மையங்களில் குடையுடன் பணம் எடுக்கக் காத்திருக்கும் மக்கள்!
நாடா புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் பணம் எடுக்கப் போகும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டு ஒழிப்பால் மக்கள் ஏற்கனவே பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் தற்போது வந்துள்ள நாடா புயல் மக்களின் துயரத்தை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.
ஏடிஎம் மையங்களில் காத்திருப்போருக்கு மழை பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது. கையில் குடையுடன் பணத்துக்காக காத்திருக்கும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8ம் தேதியிலிருந்து மக்கள் பணத்துக்காக தொடர்ந்து அலைந்து வருகிந்றனர். ஏடிஎம் மையங்களில் மக்களின் காத்திருப்பு இன்னும் குறையவில்லை.
அவசரத்திற்கு பணமில்லை
அவசரத்திற்குக் கூட பணம் எடுக்க முடியாத நிலை. அதிகபட்சமாக 2500 மட்டுமே ஏடிஎம்களில் கிடைக்கிறது. வங்கிக் கிளைகளிலோ நிலைமை அதை விட மோசம்.
2000ர ரூபாய் நோட்டு
2000 ரூபாய் நோட்டுக்களைத்தான் அதிகம் தருகிறார்கள். புதிய 500 ரூபாய் நோட்டை மக்கள் இன்னும் முழுசாகப் பார்க்க முடியவில்லை. ஏடிஎம் மையங்களில் பணம் போடப் போடத் தீருவதால் மக்களுக்கு பற்றாக்குறை தீரவில்லை.
மோடி புயலும் நாடா மழையும்
இந்த நிலையில் தற்போது நாடா புயலால் கன மழை கொட்டி வருகிறது. சென்னையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. அதேபோல கடலோரப் பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.
குடையுடன் அவஸ்தை
இதனால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கச் செல்வோர் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கையில் குடையுடன் மக்கள் பணம் எடுக்கக் காத்துள்ளனர். பலர் நனைந்த நிலையிலும் வேறு வழியில்லாமல் பணம் எடுக்கக் காத்துக் கிடப்பதைக் காண முடிந்தது.
புயல் அபாயப் பகுதிகளில்
புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் பெரும் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் ஏடிஎம் மையங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.