தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்திருக்கு தெரியுமா?
நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிக அளவு மழைப் பொழிவாக நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 27 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோரங்களில் அனேக இடங்களில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பரவலான மழை இருக்கும் என்றார்.
சென்னையில் இடியோடு மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளிவிட்டு சில நேரம் கனமழையும் இரவு இடியுடன் மழை பெய்யும். சில நேரம் பலத்த மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
27 செ.மீ மழை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 27 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 24 செ.மீ, வேதாரண்யத்தில் 16 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் மழை அதிகம்
பொன்னேரியில் 10 செ.மீ., பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினத்தில் தலா 9 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., காரைக்கால், கடலூர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் வழக்கத்தைவிட இதுவரை 93 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு
சென்னையில் கடுமையான மழை பெய்த காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பாலச்சந்திரன் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி பெரும் பகுதி கடலில் இருந்ததால் சாதாரண மழை பெய்யும் என எதிர்பார்த்தோம்.
அதிகபட்ச மழை
காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து கரைப்பகுதிக்கு வந்ததால் மாலை மூன்று மணிக்கு 1 செ.மீ பின்னர் 6 மணிக்கு 3 செ.மீ, இரவு முதல் கனமழையும் பெய்தது. நிலப்பகுதியில் நகர்ந்ததால் தான் அதிகப்பட்ச மழை அளவு இருந்தது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகம் புதுவையில் மழை
அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியில் விவசாயிகள்
காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சரியான அளவில் மழையில்லை. கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் நாகை மாவட்டத்தில் உயிரிழந்தனர். இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.