மகள் திருமணம்... வேலூர் சிறையில் நளினியுடன் முருகன் சந்திப்பு!
வேலூர் சிறையில் உள்ள நளினியை அவரது கணவர் முருகனை சந்தித்து பேசினார். மகளின் திருமணம் தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது.
வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது கணவர் முருகன் இன்று சந்தித்தார். அப்போது முருகனின் ஜீவ சமாதி பற்றி நளினி கேட்டதாக தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோர் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளனர். கடந்த வாரம் நளினி தன்னுடைய மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

நளினியின் கணவர் முருகன் தான் சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். சிறையில் முருகன் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நளினி, முருகன் சந்திப்பு சிறையில் இன்று காலை நடந்துள்ளது. பெண்கள் சிறைக்கு அழைத்து வரப்பட்ட முருகன் நளினியிடம் சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
அதே போன்று முருகன் ஜீவசமாதி அடைவதாக சொன்னது குறித்தும் முருகனிடம் நளினி கேட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு உணர்ச்சிமயமாக காணப்பட்டதாக சிறைவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications