ஈஷா, காருண்யா.. ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பால் கோவை, திருப்பூரில் தண்ணீர் பஞ்சம்: நல்லகண்ணு
ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றால், ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததை போலாகிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு.
சென்னை: கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 24ம் தேதி இங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்று, சிலையை திறந்து வைக்க உள்ளார். ஆனால், ஈஷா யோகா மையம், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் மோடி வருகைக்கு குடிமை மற்றும் சூழலியல் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் பிரதமர் வருகையை எதிர்த்துள்ளார்.
நல்லகண்ணு பேட்டி
இதுகுறித்து நல்லகண்ணு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று அளித்த பேட்டி: மேற்கு தொடர்ச்சி மலையில் கிராணி கண்டிகை என்ற கிராமம் உள்ளது. அங்குதான் யானைகள் இனப்பெருக்கம் செய்யும். அந்த அளவுக்கு அமைதியான பகுதி. அங்கு சாலை அமைக்கிறேன் என்று கூறி அனுமதி பெற்று காட்டை அழித்து படிப்படியாக தனியார் அமைப்புகளுக்கு தாரை வார்க்கப்பட்டது.
ஈஷா, காருண்யா ஆக்கிரமிப்பு
சிறுவாணி தண்ணீர் என்பது மிகவும் சுவையான தண்ணீர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நொய்யல் ஆற்றின் அருகே ஈஷா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. நொய்யலை சுற்றியுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். ஈஷா யோக மையம் மட்டுமல்ல, காருண்யா கல்லூரியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கொடிசியா சார்பில் சிறுநீர் துளிகள் என்ற பெயரில் சுற்றுலா மையம் கட்டியுள்ளார்கள்.
குடிநீர் பஞ்சம்
ஆனந்தமாயி, சின்மாயி கல்லூரிகள் அங்கு இருக்கின்றன. ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இவ்வளவு அமைப்புகளும் செய்த ஆக்கிரமிப்புகளால், தொழில்நகரமான கோவை, திருப்பூருக்கு தண்ணீர் வருவதில்லை. ஆதிக்கம் உள்ள இந்த சக்திகள் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.
பிரதமர் வரக்கூடாது
ஆக்கிரமிப்பை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் வழக்கு போட்டுள்ளதை வரவேற்கிறேன். சிவராத்திரியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் யோகா மையத்தில் கூடுவார்கள். இதையெல்லாம் அனுமதித்தால் நீர்பிடிப்பு பகுதி பாதிக்கப்படும். இயற்கை வளங்கள் அழிய துணை செய்யும் வகையில் பிரதமர் மோடியின் வருகை அமைந்துவிடும். எனவே பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது. இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்தார். பேட்டியின்போது ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.