திராவிட இயக்கத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி தினகரன்தான்-'நாகூசாமல்' பேசும் நாஞ்சில் சம்பத்
திராவிட இயக்கத்தை பாதுகாக்க பிறந்தவர் டிடிவி தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் இல்லாத அதிமுக நெல்லில்லாத வயல் என்றும், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வந்தவர் அவர் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரனை நீக்கி விட்டதாக அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுங்கித்தான் இருக்கிறார் என்றும், இது பாஜக செய்த சதி என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், சசிகலாவை நீக்க யாருக்கும் அதிகாரமில்லைங்கறேன் என்றார்.

சசிகலாவை நீக்க முடியுமா?
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க முடியுமா என்று கேட்ட நாஞ்சில் சம்பத், சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்றார். இவர்கள் அனைவருக்கும் பாஜக விலை பேசிவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். பொதுக்குழு கூடிதான் சசிகலாவை நியமித்தனர் என்றார்.

காலில் விழுந்த ஒபிஎஸ்
சசிகலாவின் காலில் விழுந்தவர் ஒபிஎஸ். அவர் காலில் விழுந்தே காரியம் சாதிக்கும் இழிபிறவி என்றும் தாறுமாறாக குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் ஒரு நிறம் மாறுகிற பச்சோந்தி என்று கூறிய நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மரணத்தில் எந்த வித மர்மமும் இல்லை என்றார். முதல்வராக இருந்த ஓபிஎஸ் அதை கண்டுபிடித்திருக்கலாமே.

மோடியின் காலில்
எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் மோடியின் காலில் விழுந்து கிடக்கின்றனர். ஆளுமை உள்ளவர்களை தீர்த்து கட்டுவது, தலைக்கு விலை வைப்பது பாஜகவின் பாணி என்றார். 123 சட்டசபை உறுப்பினர்களும் இந்த முடிவு எடுத்தது ஏன்?.

டிடிவி தினகரன்
திராவிட இயக்கத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி டிடிவி தினகரன்தான் என்று கூறிய நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் இல்லாத அதிமுக நிறமில்லாத நீல வானம். நித்திலம் இல்லாத கடல், நெல்லில்லாத வயல். இந்த கட்சியைக் காப்பாற்றுவதற்கும் கரை சேர்ப்பதற்கும் காலம் தந்த மகத்தான தலைவன்.

காலம் தந்த தலைவன்
டிடிவி தினகரனால் மட்டும்தான் இதை மீட்க முடியும், முன்னெடுத்து செல்ல முடியும். வேறு யாராலும் முடியாது. டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அவர் தலைமை தாங்கி ஆட்சிமைக்கும் நாள் வரும். வைகோவை விட , ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் மிகச்சிறந்த ஜனநாயகவாதி. தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப காலம் தந்த தலைவன் டிடிவி தினகரன்தான் என்றும் அடித்துக் கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications