வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என நிரூபித்த தினகரன்.... மிடியலை மிஸ்டர் சம்பத்!
டிடிவி தினகரனை வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஃபேஸ்புக் பக்கத்தில் எதை எழுதினாலும் சர்ச்சையாகிவிடுகிறது. தற்போது தினகரனை, வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என புகழ்ந்து தள்ளியிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகியோரை பத்தினி தெய்வங்கள் என விமர்சித்திருந்தார். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாத்திமா பாபுவும் சரியான பதிலடி கொடுத்தார். நாஞ்சில் சம்பத் உங்கள் தட்டில் இருப்பது சோறா? வேறா என வெளுத்து வாங்கியிருந்தார்.

திராவிட இயக்கம்..
இன்று நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
திராவிட இயக்கத்தின் திருப்பத்திற்கும், விருப்பத்திற்கும் உரிய வரலாற்று சிறப்பு மிகுந்த மயிலை மாங்கொல்லையில் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நேற்று ஆற்றிய உரை கழக தோழர்களுக்கும் அம்மாவின் பக்தர்களுக்கும் களிப்பையும் கரைகாணா உற்சாகத்தையும் தந்து விட்டது. மதிப்பிற்குரிய டிடிவி தினகரன் அவர்கள் வீரன் , தின்னியன், தின்தோள் மறவன் என்பதை நிரூபித்து விட்டார்.

பாவி பன்னீர்
எங்கள் திசைகளில் அவர் தேன் சொரிவார் என்ற மகத்தான நம்பிக்கையை மாங்கொல்லை பேச்சு எங்களுக்கு தந்து விட்டது. எங்களுக்கு தித்திப்பையும் எதிரிகளுக்கு திகிலையும் தந்த இந்த பேச்சு அம்மாவின் மரணத்தின் பின்னால் மறைந்து நின்று அரசியல் செய்கின்ற பாவி பன்னீரின் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டது.

ஆஸ்பெட்டாஸ் கோட்டை
அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டையான இராதாகிருஷ்ணன் நகரில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட யுத்த நாளில் ,எதிரிகளின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அவருடைய பேச்சு முத்திரை பதித்து விட்டது.

வாகைப்பூக்கள்..
ஆயிரக்கணக்கான நலிந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று தன் பயணத்தை தொடங்கி இருக்கிற கழக துணைப் பொதுச்செயலாளர் வாகைப்பூக்களை வாரித்தருவார் ,வரலாறு படைப்பார். இதை காலம் சொல்லும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடும் விமர்சனம்
நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே இந்த பதிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வசைபாடியுள்ளனர் அவரது பாலோயர்கள். "Innova car க்காக மனத்தை அடகு வைத்த திராவிடனே!"என்றெல்லாம் கூட விமர்சித்துள்ளனர் பாலோயர்கள்.












Click it and Unblock the Notifications