ஜனநாயகத்தின் சின்னமாகவே மாறிவிட்ட டிடிவி தினகரன்... கூசாமல் புகழும் நாஞ்சில் சம்பத்!
ஃபெரா குற்றவாளி டிடிவி தினகரனை "ஜனநாயகத்தின் சின்னம்" என கூசாமல் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: ஜனநாயகத்தின் சின்னமாகவே மாறிவிட்டார் டிடிவி தினகரன் என சசிகலா கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தினகரனுக்கு ஜால்ரா போட்டு பதிவுகளை வெளியிட்டு வந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் கடந்த ஒரு வார காலமாக திடீரென அவர் ஃபேஸ்புக் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜனநாயகம் மீதான தாக்குதல்
இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் நேற்று இழைத்ததவறைப்போல் இதுவரை எந்நாளும் செய்ததில்லை. இது ஜனநாயகத்தின் மீது நடந்த பகிரங்கதாக்குதல்.
கொரில்லா தாக்குதல்
ஜனநாயகத்தின் மீது நடந்த அத்துமீறல். ஜனநாயகத்தின் மீது நடந்தஆக்கிரமிப்பு. மக்களாட்சி தத்துவத்தின் மீது நடந்து இருக்கிற கொரில்லாத் தாக்குதல்.
பின்னணியில் யார்...
இந்த பச்சைப் படுகொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பச்சைக் குழந்தைக்கு கூட தெரியும். ஒரு துரோகி அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார்.
விளம்பரம் இனி இல்லை
இன்னொரு துரோகி மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார். இன்னொரு துரோகி எங்கள் வெற்றிக்கு முதல்படி என்கிறார். துரோகத்துக்கு கிடைத்து இருக்கிற விளம்பரமும் வெளிச்சமும் இனி கிடைக்காது.
தினகரன்
சரித்திரம் இவர்களை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசும். இதை அநீதியாகப் பார்க்கவில்லை, இதை அனுபவமாக பார்க்கிறேன் என்று துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சொன்னதைக் கேட்டு சொர்க்கமே சொக்கிவிட்டது. அவருடைய நாகரீக அரசியலை நாளை இந்த நாடே முழுமையாக அங்கீகரிக்கும்.
ஜனநாயகத்தின் சின்னம்
துரோகத்தின் ஆரக்கால்கள் வெட்டி வீழ்த்தப்படும். ஜனநாயகத்தின் சின்னமாகவே டிடிவி தினகரன் அவர்கள் மாறிவிட்டார்கள் ஆகவே எப்பாடுபட்டாவது டிடிவி தினகரனை வெற்றி பெற வைப்போம், எல்லாத் திசைகளும் அவருடைய திருப்பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கும் நேரம் வந்து விட்டது. தமிழகம் அம்மாவிற்கு பிறகு ஒரு ஆளுமை உள்ள தலைவனை இப்போது அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் பின்னால் அணிவகுப்போம்! பணி முடிப்போம்!
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.