புதுவைக்கு மாநில அந்தஸ்து- தீக்குளிக்க காங்கிரசார் ரெடியாக இருக்க வேண்டும்: 'நாசா' பரபரப்பு பேச்சு
புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தவும், தீக்குளிக்கவும் காங்கிரஸார் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி பேசியதாவது:
புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் தீர்மானம். மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவை மாநிலத்திலிருந்து காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை அந்தந்த மாநிலங்களுடன் இணைந்து விடும்.
இதனால் மாநில அந்தஸ்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும், தீக்குளிக்கவும் காங்கிரஸார் தயாராக இருக்க வேண்டும்.
வரும் 26-ஆம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதுவைக்கு வருகிறார். அப்போது, புதுவை அரசின் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து புகார் செய்யப்படும்.
ஆளும் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வர எப்போதும் தயாராகவே உள்ளனர். அவர்களை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.