ஜெயலலிதா அரசை பாராட்டவில்லையே மோடி- அதிமுகவினர் அதிருப்தி
சென்னை: தனது திருச்சி பேச்சில் தமிழக அரசின் செயல்பாடுகளையும், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், துணிச்சலான செயல்பாடுகளையும் பற்றி நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக அதிமுகவினர் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
திருச்சியில் நேற்று நடந்த இளம் தாமரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, தமிழக அரசு குறித்தோ, முதல்வர் ஜெயலலிதா குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மாறாக, தமிழர்களைத்தான் அவர் வெகுவாக உயர்த்திப் பேசினார், புகழ்ந்து பேசினார். தமிழர்களின் கடின உழைப்பு, சோர்வறியாமல் உழைக்கும் தன்மை உள்ளிட்டவற்றை அவர் புகழ்ந்து பேசினார்.
மோடியின் பேச்சால் அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனராம். பலர் வெளிப்படையாகவே இதுகுறித்து புலம்பி வருகின்றனர்.

ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே
இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் அதுகுறித்து மோடி ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி குறித்தும் பேசவில்லையே
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் சந்தித்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் குறித்தும் அவர் பேசாதது ஏமாற்றமாக இருக்கிறது.

அம்மாவின் நண்பரா இப்படி...
முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பர் மோடி. அப்படி இருந்தும், தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் எங்களது தலைவி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

திமுகவையும்தான் பேசவில்லை
ஆனால் அதிமுக, ஜெயலலிதா மட்டுமல்லாமல், திமுக, கருணாநிதி குறித்தும்தான் மோடி நேற்று பேசவில்லை. லோக்சபா கூட்டணிக்கு வசதியாக இருக்கும் வகையிலேயே யாரையும் பற்றிப் பேசாமல் மோடி விட்டு விட்டார் என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

அதே கூட்டம்.. அமோக ஓட்டு கிடைக்கும்...
இதற்கிடையே, ர் மாவட்ட பாஜக நிர்வாகியான மோகன்தாஸ் என்பவர் கூறுகையில், அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளை விட தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவே நாங்கள் அதிகம் விரும்புகிறோம் என்றார். இவர் என்ன கணக்கில் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை.

பலமொழிகளில் பேசிய மோடி...
இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் கேரளா மற்றும் தமிழகத்தில் பேசிய மோடி பல மொழிகளில் பேசி கலக்கி விட்டார். கேரளாவில் நடந்த கூட்டத்தி்ல அவர் மலையாளத்தில் 5 நிமிடம் பேசி அசத்தினார். தமிழகக் கூட்டத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என கலந்து கட்டி அடித்தார்.












Click it and Unblock the Notifications