ஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை... 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை!
ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் 2018ல் தகவல்தொழில்நுட்பத் துறை வளர்ச்சி காணும் என்று நாஸ்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை : தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு தேவை 2018ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் என்று நாஸ்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டில் ஐடி துறை விசா கெடுபிடிகள், கிளைண்ட்டுகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வரவால் இழந்த கிளைண்ட்டுகளை மீட்டு, உற்பத்தியில் மீண்டும் போட்டி நிலையை இந்திய ஐடி நிறுவனங்கள் உருவாக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து நாஸ்காமின் தலைவர் சந்திரசேகர் கூறும்போது "2017 மற்ற ஆண்டுகளைப் போல இல்லை. பல்வேறு அரசியல் மற்றும் பொருளதார மாற்றங்களால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. விசா நடைமுறைகளில் அதிக கெடுபிடிகள் இருந்தன, இதனால் ஐடி துறையில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டினர்" என்கிறார்.
அமெரிக்கர்களுக்கே பணி என்ற முழக்கம்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விசா நடைமுறைகளுக்கான விதிகளை கடுமைப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை முன் எடுத்தார். எச்1 பி விசா வழங்குவதையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் 60 சதவீத ஐடி துறையானது அமெரிக்க நிறுவனங்களை சார்ந்தே இருக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு அமெரிக்கர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது.
அடுத்த பரிசீலனையில்
இதே போன்று ஓபாமா கொண்டு வந்த எச்ஒன் பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிக்கும் பணி வழங்கும் உத்தரவை திரும்பப் பெற அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் பல இந்திய குடும்பங்கள் பாதிப்பை சந்திக்க நேரிடம்.
அமெரிக்கர்களுக்கு பணி
அமெரிக்காவின் கெடுபிடியால் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்கர்களை பணியில் அமர்த்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. விப்ரோ நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்கர்களை பணியில் அமர்த்தி அமெரிக்காவில் 4 ஹப்களை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று உள்ளூர் விதிகளுக்கு எற்ப டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களும் அமெரிக்கர்களை பணியில் அமர்த்தி வருகிறது.
2018ல் ஐடி துறை வளர்ச்சி காணும்
பல்வேறு சவால்கள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்களான ஆட்டோமேஷன், ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் மெஷின் லெர்னிங் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதனால் ஐடி துறைக்கு 2018ல் நல்ல வளர்ச்சி இருக்கும் என நம்புவதாக நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
ஐடி துறையில் திடீரென புகுந்த இந்த ஆடோமேஷன் வளர்ச்சியால் இந்த ஆண்டு பலர் பணி இழக்க நேரிட்டது. இது ஊழியர்கள் என்ற அளவில் மட்டும் இல்லாமல் சீனியர் எக்சிக்யூட்டிவ் வரையிலும் தொடர்ந்து உடனுக்குடன் பணியை விட்டு வெளியேற்றல் படலமும் 2017ல் நடந்தது.
திடீர் ராஜினாமாவால் சரிவு
இன்போசிஸ் நிறுவன சிஈஓ விஷால் சிகாவின் திடீர் ராஜினாமா நாட்டிலேயே ஐடி துறையில் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ்க்கும் மிகப்பெரிய நெருக்கடிகளைத் தந்தது. 2018ல் இன்போசிஸ் தங்களின் புதிய சிஇஓ சலில் பரேக் வழிகாட்டுதலின்படி புதிய பாதையில் பயணிக்கும் என்று தெரிகிறது.