முதல்வர் பதவி அக்கப்போர்.... 'அத்தான் நடராஜனை' அமைதிப்படுத்தியது திவாகரன்?
தமிழக முதல்வர் பதவியை கபளீகரம் செய்வதில் மன்னார்குடி கோஷ்டிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாம். இதில் நடராஜனை திவாகரன்தான் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் பதவி தமக்குத்தான் வேண்டும் என அடம்பிடித்த நடராஜனை மன்னார்குடி திவாகரன்தான் சமாதானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய சசிகலா முதல்வர் நாற்காலியை கபளீகரம் செய்ய தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரப்போவதை சுட்டிக்காட்டி நானே முதல்வராவேன் என அடம்பிடித்தார் அவரது கணவர் நடராஜன்.
அதேபோல் தங்களுக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என சசிகலாவின் சொந்தங்கள் திவாகரனும் தினகரனும் முட்டி மோதினர். இதனால்தான் அதிமுகவை வளர்த்ததில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது ஒரு போடுபோட்டுப் பார்த்தார் திவாகரன்.
திவாகரன் பேச்சுக்கு எதிர்ப்பு
ஆனால் திவாகரனின் பேச்சுக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அக்கப்போரால் தமக்கு நெருக்கடி அதிகரித்து வருவதையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விவரித்திருந்தார்.
ஒதுங்கிய சொந்தங்கள்
தற்போது சசிகலாவுக்கு வழிவிட்டு நடராஜன், திவாகரன், தினகரன் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டனராம். இதனால் சசிகலா தெம்பாக இருக்கிறாராம்.
அமைதியான நடராஜன்
இதில் 'அத்தான்' நடராஜனை சமாதானப்படுத்தியதில் திவாகரனுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறதாம். சசிகலா முதல்வரானால் என்ன? உங்களுக்குத்தானே நாங்கள் கட்டுப்படுகிறோம்... ஆகையால் நீங்கள் மல்லுக்கட்ட வேண்டாம் என பச்சைக்கொடி காட்டி பேசினாராம் திவாகரன். இதனைத் தொடர்ந்தே நடராஜனும் அமைதி காப்பது என முடிவெடுத்து டெல்லி லாபிகளில் சசிகலாவுக்காக தீவிரம் காட்டுகிறாராம்.
தினகரன்vs திவாகரன்
இருப்பினும் தினகரன் தரப்போ, கட்சியிலாவது முக்கிய பொறுப்பை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் படுமும்முரமாக இருக்கிறாராம். இதனால் தினகரன் மீது செம காட்டத்தில் இருக்கிறதாம் திவாகரன் தரப்பு.