மறுபிறவி எடுத்த நடராஜனுக்கு இனி சிறைச்சாலைதான் போக்கிடமா?
சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்து வந்தவர். இனி இரண்டு ஆண்டு காலம் சிறைச்சாலையில் காலம் தள்ளப்போகிறார்.
Recommended Video
சென்னை: உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டு மறுபிறவி எடுத்து வந்த நிலையில் சொகுசு கார் மோசடி வழக்கில் சிறை செல்லப்போகிறார் சசிகலா கணவர் நடராஜன்.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை அதிமுகவிற்கு தலைவியாகவும், தமிழக முதல்வராக்கவும் பின்னாலிருந்து இயக்கியவர்களின் சசிகலா கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உண்டு.
30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்களும் இல்லை, 30 ஆண்டு காலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்பார்கள். இது சிலரது வாழ்க்கையில் உண்மையாகிவிடுகிறது.
விளார் நடராஜன்
தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராஜன். 1960களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் தீயாய் பரவிய திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும், அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது.
திமுக மாணவர் இயக்கம்
தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965ஆம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
மக்கள் தொடர்பு துறை
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏபிஆர்ஓவாக நடராஜனை நியமித்தார்.
கருணாநிதி தலைமையில் திருமணம்
அரசு வேலை கிடைத்ததும் 1970ம் ஆண்டு விளார் விவசாயி மருதப்பனின் மகன் நடராஜன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவேகானந்தனின் மகள் சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதாவை சந்திக்கும் வரை 12 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்தது. கடலூரில் வாழ்க்கை கடந்தது.
திருப்புமுனை ஏற்படுத்திய சந்திப்பு
1982 ஆம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982ஆம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். அதோடு சத்துணவுத் திட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதாவுக்கு அளித்தார். அதோடு ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழங்கினார்.
நடராஜனின் பணி
கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், அப்போது, மாவட்ட ஆட்சியராக சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் நடராஜன். அவர், முதல்வர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பாக செய்தியாக்கினார். தமிழகம் முழுவதும் திறமையாகக் கொண்டு சேர்த்தார்.
சென்னைக்கு வந்த நடராஜன்
சந்திரலேகா ஐஏஎஸ் ஜெயலலிதா இடையே நட்பு உருவானது. ஜெயலலிதாவுக்கு ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவை வைத்தே, அரசியலையும், நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வைக்கலாம் என்று நினைத்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், உடனடியாக சந்திரலேகாவை சென்னைக்கு மாற்றிக் கொண்டுவந்தார். சந்திரலேகாவிடம் பிஆர்ஓ வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கினார்.
சசிகலா கவனித்த கடை
தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார். அவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது.
அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புக்களை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார். சசிகலா இந்த கடையை கவனித்து வந்தார்.
போயஸ் கார்டன் போன சசி
ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா. அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக சசிகலாவை உருவாக்கினார் நடராஜன்.
திவாகரன் பாதுகாப்பு
போயஸ்கார்டனில் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த பலரை வெட்டி விட்டார். போயஸ்கார்டனிலும், அதிமுகவிலும் தனக்கு நெருக்கமானவர்களை, நம்பிக்கையானவர்களை ஜெயலலிதா உடன் உலா வரச்செய்தார். தம்பி திவாகரனை அழைத்து வந்தார் சசிகலா. ஜெயலலிதா செல்லும் இடத்துக்கு எல்லாம் திவாகரன் போனார்.
நடராஜனை நம்பிய ஜெயலலிதா
தமிழக முதல்வரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர்.
பல சம்பவங்கள் ஜெயலலிதாவை பாதிக்கவே, சசிகலா, நடராஜனை முழுவதுமாக நம்பினார் ஜெயலலிதா. தேர்தலில் சீட்டு வழங்குவதாக கட்சிகாரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், ஏமாற்றப்பட்டவர்கள் பணத்துக்காக முறையிட்ட போது, கொலை மிரட்டல் விட்டதாகவும் நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. கைதானார் நடராஜன்.
நடராஜன் வீட்டில் கடிதம்
இதனைக் கண்டித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால் அந்த கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பவில்லை. நடராஜன் வசம் அந்த கடிதம் இருந்தது, இதனை கைப்பற்றிய போலீசார் கருணாநிதியிடம் கொடுக்க அது பத்திரிகைகளில் வெளியானது.
நடராஜன் ஜெயலலிதா பிரிவு
ஊடகங்களில் இந்த விஷயம் வெளியானவுடன், ஜெயலலிதா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். நடராஜன் மீது கோபம் அதிகரித்தது. தனக்கு எதிராக அவர் ஏதேனும் சதித்திட்டம் தீட்டுகிறாரா என சந்தேகம் எழுந்தது.
நடராஜனும் ஜெயலலிதாவும் பிரிவதற்கான விதை விழுந்தது. வேதா நிலையத்திற்கு நடராஜன் நுழைய தடை போட்டார். ஆனாலும் சசிகலாவை தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.
கூண்டோடு வெளியேற்றிய ஜெ.,
1992-99 காலகட்டத்தில் புதிய பார்வை என்ற பத்திரிக்கையை தொடங்கினார். சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த அந்த இதழ் 2004 மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் பல கருத்துக்களை எழுதினார் நடராஜன். ஒரு கட்டத்தில் நடராஜன், தன் செல்வாக்கை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டார். இதை அறிந்த ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்கினார். சசிகலாவை, போயஸ் தோட்டத்தில் இருந்தே வெளியேற்றினார்.
தஞ்சையில் கோலோச்சிய நடராஜன்
தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கலைவிழா நடத்தி வருகிறார் எம். நடராஜன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த விழாவில் பேசிய நடராஜன், சசிகலாவுக்கும் குழந்தைகள் கிடையாது. சசிகலாவுக்கு அதிமுக தான் குடும்பம். லட்சோப லட்சம் தொண்டர்கள் தான் பிள்ளைகள் என்றார்.
ஆட்சி தொடரும்
சிலர் எங்களை மண்டியிடச் செய்ய முயல்கின்றனர். நாங்கள் ஆண்ட பரம்பரையினர். ஆளப்பிறந்தவர்கள். எங்களுக்கு பணிவிடை செய்து வாழ்ந்தவர்களுக்கு, நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். திராவிட இயக்க வரலாறும், திராவிட ஆட்சியும் தொடரும் என்று பேசினார்.
அரசியல் சாணக்கியர்
தஞ்சையில் நடராஜன் பேசிய சில வாரங்களிலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. நடராஜன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிக்கைகள் வெளியாகின.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மோசமடையவே சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகமும், கல்லீரலும் பொறுத்தப்படவே, நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். சொல்லப்போனால் நடராஜனுக்கு இது மறுபிறவி என்றே சொல்ல வேண்டும்.
சொகுசு கார் மோசடி வழக்கு
சொகுசு கார் மோசடி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்தது. 2010 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நடராஜன். இந்த வழக்கில் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இவர் சிறை செல்வது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து மறுபிறவி எடுத்து வந்த நடராஜன் இனி சில ஆண்டு காலம் சிறையில் காலம் தள்ள இருக்கிறார்.