இந்த வீட்டிலிருந்துதான் நடராஜனை போலீஸார் அழைத்துச் சென்றனர்....!
தென்காசி: குற்றாலத்தில் உள்ள நடராஜனின் பங்களாவிலிருந்துதான் அவரைப் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனராம்.
எம்.என்.என்றழைக்கப்படும் சசிகலா கணவர் நடராஜன் அடிக்கடி குற்றாலம் வருவது வழக்கம். குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள விவேகானந்தா ஆசிரமம் அருகில் மெயின் ரோட்டிலிருந்து சுமார் 300அடி தூரத்தில் உள்ள ஒரு பங்களாவில்தான் ஓய்வு எடுப்பார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை பதிவு எண் கொண்ட சாண்டல் கலர் இன்னோவா காரில் வாட்டசாட்டமான 4 பேர் அவர் தங்கியுள்ள பங்களாவுக்கு வந்துள்ளனர்.
வெளியே உள்ள பெரிய கதவும்,சின்ன கதவும் உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் காரை சாலையில் நிறுத்தி அருகிலுள்ள விடுதிகாரர்களிடம் கேட்டு அவர் தங்கியுள்ளதாக கூறப்பட்ட விடுதி காவலாளி வரும் வரை காத்திருந்து பின் சின்ன வாயில் வழியாக வீட்டுக்குள் அந்த 4 பேரும் சென்றுள்ளனர்.
அதன் பின்னர்தான் நடராஜன் கைதானதாக செய்திகள் வெளியாகின. குற்றாலம் போலீசாரும், தனிப்படை போலீசாரும், நிருபர்களும் வாசல் முன்பு திரண்டனர். ஆனால் போலீஸார் உள்பட யாருக்கும் நடராஜன் கைது செய்யப்பட்டாரா என்ற தகவல் தெரியவில்லை. விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக உள்ளூர் போலீஸார் கூறுகிறார்கள்.