சென்னையில் வட கிழக்கு மாநில பெண்ணிற்கு தொல்லை: இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
சென்னையில் நேரு விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டியை காணவந்த வடகிழக்கு மாநில பெண்ணிற்கு ஆபாச சைகை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: நேரு விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டியை காணவந்த வடகிழக்கு மாநில பெண்ணிற்கு ஆபாச சைகை செய்த இளைஞரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் வடகிழக்கு மாநில பெண்களிடம் ரசிகர்கள் போர்வையில் வந்த இளைஞர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர்.
அசிங்கமாக நடந்து கொண்ட அந்த இளைஞரின் செய்கை அடங்கிய வீடியோ ட்விட்டர், முகநூலில் வெளியாகி அது வைரலாகியுள்ளது. இதற்கு கால்பந்து அணி உரிமையாளரும் கண்டனம் செய்துள்ளார்.

சென்னையின் எஃப்சி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சென்னையின் எஃப்.சி. அணிக்கும் வடகிழக்கு யுனைடெட் அணிக்கும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது சென்னை அணியின் கை ஓங்கியது. மூன்று கோல்களை அடித்து முன்னிலையில் இருந்தது.

இளைஞர்கள் அத்து மீறல்
சென்னையின் எஃப்.சி. அணி ரசிகர்களில் சிலர் வடகிழக்கு அணியின் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்த பெண்கள் முன்னால் நின்று ஆட்டம் போட்டனர்.
அத்துமீறிய ஒரு இளைஞர் வடகிழக்கு மாநில பெண்களைப் பார்த்து ஆபாசமாக சைகை செய்தார்.

வடகிழக்கு யுனைடட் எஃப்.சி அணி கண்டனம்
வடகிழக்கு யுனைடட் எஃப்.சி அணியின் உரிமையாளர் சென்னை ரசிகர்களில் ஒரு சிலர் இவ்வாறு வடகிழக்கு மாநிலத்தவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட ரசிகர்களுக்கு, நீங்கள் போலி ரசிகர்கள். நீங்கள் உங்கள் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையின் எஃப்சி அணி
இந்த செயலுக்கு சென்னையின் எஃப்சி அணி உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். உண்மையான கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். இது போலி ரசிகர்களின் செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மைதானத்தில் ஓழுக்கம் தவறுபவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இளைஞர் மீது புகார்
பெண்களிடம் இளைஞர் அத்துமீறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் பலத்த கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே சென்னையின் எஃப்சி அணி சார்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் அந்த இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோவையும் ஆதாராமாக இணைத்துள்ளனர்.

வாட்ஸ்அப் எண்ணில் தகவல்
வீடியோவில் பதிவாகியுள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றன. சந்தேகத்திற்கு உரிய நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9498142616 காவல் ஆய்வாளர் பெரியமேடு காவல் நிலையம், 949812687 காவல் உதவி ஆணையாளர் வேப்பேரி சரகம், 9498122722 காவல்துறை உதவி ஆணையாளர் கீழ்பாக்கம் ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் கூறலாம்.
இளைஞர் கைது செய்யப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications