நெடுவாசல் போராட்டம்.. வலுக்கட்டாயமாக முடிக்க முயற்சி.. கலெக்டர் இன்று பேச்சுவார்த்தை
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 17வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் போராட்டக்குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 17வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினருடன் இன்று மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
மாணவர்களும், இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்குழுவினர் உறுதி
அரசியல் தலைவர்கள் நேரடியாக நெடுவாசலுக்கு சென்று பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவினர்.

கிராம மக்கள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் கசிவால் புற்றுநோய் ஏற்படுவதாக அச்சம் நிலவுகிறது. விவசாயத்தை அழித்து வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தங்களுக்கு தேவையில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திட்டத்தை ரத்து செய்யும் வரை வீடு வாசல் செல்லாமல் போராட்டத்தை தொடருவோம் என்று கூறியுள்ளனர்.

மத்திய அரசு உறுதி தருமா?
மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் வாய்மொழியான உறுதியான ஏற்கப்போவதில்லை என்றும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு
இந்நிலையில், திட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சியர் கணேஷை சந்திக்க கிராம மக்கள் மறுத்தனர். இதனையடுத்து நேற்று மாலையில் டிஆர்ஓ ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
கோட்டைக்காடு போராட்டம் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்னர் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியருடன் பேச்சுவார்த்தை
இதனிடையே போராட்டத்தை இன்று முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நெடுவாசல் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டைக்காடு போல நெடுவாசல் போராட்டமும் முடிவுக்கு வருமா இன்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications