மணல் கொள்ளை.... மக்கள் பிரச்சினை: வேலூரில் வெளுத்துக்கட்டிய ஸ்டாலின்
வேலூர்: நிர்வாகம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். தலை சரியாக இருந்தால், உடல் சரியாக இருக்கும். நான் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக குறை சொல்ல மாட்டேன். அந்த அதிகாரிகளே அரசுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆற்றில் மணல் அள்ளுவதால் ரூ.5,825 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கு வெறும் ₹76 கோடி மட்டுமே வருகிறது. மற்ற பணத்தை எல்லாம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பேருந்து பயணம்
நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் வேலூரில் பழைய மீன்மார்க்கெட் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். காமராஜர் சிலை வரை மக்களுடன் நடந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது டிராபிக்கில் நின்ற 16ம் எண் அரசு டவுன் பஸ்சில் ஏறிய ஸ்டாலின், கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றார். பின்னர் பயணிகள் ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டார்.
பீடி தொழிலாளர்கள்
அங்கிருந்து கார் மூலம் கழிஞ்சூர் சென்றார். அங்கு நடந்து சென்று பீடித்தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். அதில் சில வீடுகளின் முன்பு அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் சென்ற அவர் அங்கிருந்து மாநகராட்சி 1வது மண்டல அலுவலகம் வரை நடந்து சென்று அங்கிருந்து வேலூர் சாலையில் திரும்பி ஓடை பிள்ளையார் கோயில் வரை நடந்து சென்று மக்களை சந்தித்தார்.
நிர்வாகம் சரியில்லையே
நிர்வாகம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். தலை சரியாக இருந்தால், உடல் சரியாக இருக்கும். நான் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக குறை சொல்ல மாட்டேன். அந்த அதிகாரிகளே அரசுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்றார்.
வேலைவாய்ப்பு
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால்தான் வேலைவாய்ப்பு பிரச்னையை சமாளிக்க முடியும். ஆகவே, உங்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை இங்கு இருக்கிறது என்ற போர்டை போடக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் திமுகவின் லட்சியமாக இருக்கும்.
லோக் ஆயுக்தா சட்டம்
லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்தால் லஞ்சம், லாவண்யம் முற்றிலும் ஒழிக்கப்படும். நிச்சயம் அதை கொண்டு வருவோம். ஏற்கனவே திமுக ஆட்சியில் 1973ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சட்டத்தை பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் வந்தபோது கவுன்சிலர் தொடங்கி முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அந்த சட்டம் இருந்தது. அதன்பிறகு எம்ஜிஆர் ஆட்சி வந்த பிறகு இந்த சட்டம் அடியோடு ரத்து செய்யப்பட்டது.
மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவர் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்திருக்க முடியும். அது வந்து இருந்தால் ஜெயலலிதா தொடங்கி அனைவரும் உள்ளேதான் இருந்திருப்பார்கள். ஆகவே, நான் நிச்சயமாக சொல்கிறேன். எப்படி திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரோ, அதேபோல் லோக் ஆயுக்தா சட்டமும் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு திமுக எப்போதும் பக்க பலமாக உள்ளது. நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மணல் திருட்டு
ஆற்காட்டில் திருமண மண்டபத்தில் நகர வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பேசிய ஸ்டாலின், ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் பயணத்தை தொடர்ந்தார். வாலாஜாவில் மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். கரூர் மற்றும் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே ஆறுகளை கொள்ளையடித்து வருகின்றனர் என்றார்.
5000 கோடி கொள்ளை
அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை நீங்களே தெரிவித்துள்ளீர்கள். தாம்பரம், பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டம், பூந்தமல்லி கூட்டு குடிநீர் திட்டம் என 15 திட்டங்கள் பாதியளவில் நிறைவு பெற்று, மீதி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. மணல் கொள்ளையால் 1.25 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. 300 ஏரிகள் வறண்டுள்ளன. மணல் அள்ளுவதால் ரூ.5,825 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கு வெறும் ₹76 கோடி மட்டுமே வருகிறது. மற்ற பணத்தை எல்லாம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு சுதந்திரம்
திமுக ஆட்சி அமைத்தவுடன் மணல் கடத்தலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகளை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு அமைக்கப்படும். அதில் சமூக சேவகர், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இணைந்து மணல் கொள்ளை தடுக்கப்படும். காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மணல் கடத்தலை தடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றார் ஸ்டாலின்.