மெட்டல் டிடெக்டர் சோதனை: நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை தீவிரவாதிகளைப் போல மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி கொடுமை செய்துள்ளனர்.
சென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவையே நிர்மூலமாக்கிவிட்டது நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை எழுதப் போனவர்களையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி 'தீவிரவாதிகளாக' நடத்தியிருக்கிறது டெல்லி.
இந்தியா முழுவதும் வெவ்வேறான கல்வி திட்டங்கள் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கல்வி முறையை பின்பற்றி வருகின்றன.
தற்போதைய மத்திய பாஜக அரசு நீட் எனும் புதிய தேர்வு முறையை திணித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் இத்தேர்வு சிபிஎஸ்இ பாடமுறையிலான கேள்விகளைக் கொண்டது.
நீட் தேர்வில் வெல்ல முடியாது
தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையே எடுக்காதவர்கள். அப்படி உள்ள நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எப்படி வெல்ல முடியும்? ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது இந்த நீட்.
தலைமுடி கலைத்து சோதனை
இதுபோதாதென்று இன்று நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளோ மிக கொடூரமானவை. பெண்களின் தலைமுடியையெல்லாம் கலைத்து முழுக்கை உடைகளை கத்தரிக்கோலால் கத்தரித்து... மகா கொடுமையை அரங்கேற்றியுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர்
இதன் உச்சமாக மாணவர்களை மெட்டல் டிடெக்டர் வைத்து அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியிருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த மாணவர்களை தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுவிட்டதோ என்னவோ?
இன்னும் எத்தனையோ
நீட் எனும் கொடூரத்தின் பிடியில் மாணவர்கள் சிக்கிய நிலையில் இத்தகைய சோதனைகளும் அவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கவே செய்யும். இன்னும் இந்த மத்திய அரசு எத்தனை எத்தனை கூத்துகளை அரங்கேற்றுமோ?