நெல்லை: தொழில்கல்வி மாணவர்கள் திடீர் மோதல்- 10 பேர் கைது
நெல்லை: சமுதாயக் கயிறு கட்டியதாக நெல்லை தொழிற் பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ஐடிஐ தொழிற்பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ஒரு சில மாணவர்கள் சிலர் தங்கள் சமுதாய கொடியை குறிக்கும் வகையில் கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவு மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை இரு பிரிவை சேர்ந்த மாணவர்களும் பாளை வஉசி மைதானத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் கை மற்றும் கம்பால் தாக்கி கொண்டனர். இதில் வடக்கு குப்பக்குறிச்சையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் பாளை போலீசில் தனித் தனியாக புகார் அளித்தனர். பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த முருகன், சோமு, சுரேஷ், இலங்காமணி, வேல்முருகன், கீழநத்தம் இசக்கிபாண்டி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு குப்பக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன், பரதன் காளிராஜ், சுரேஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.