"நோ பிளாஸ்டிக்".. சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்!
நெல்லை : சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 22-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. விழாவுக்கு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசிய போது, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்கு, நெல்லை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

பக்தர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்குவதால் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும். குடிநீர் வசதிக்காக பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும்.
ஏற்கனவே கோவில் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும். பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைத்து, விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்
கோவில் வளாக பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி வாங்க வேண்டும். தற்காலிக கடையின் முன்பு கண்டிப்பாக கடை உரிமையாளர்கள் குப்பை கூடை வைக்க வேண்டும்.இவற்றை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறை மூலம் தேவையான பாதுகாப்பு வசதியை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் விழாவிற்கு வந்து செல்வதற்கு வசதியாக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications