"செம் சயின்ஸ்" கண்காட்சி.. ராக்கெட் தயாரித்து அரசுப் பள்ளி மாணவர்கள் செம சாதனை!
நெல்லை: நெல்லை மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறன் மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் "செம் சயின்ஸ்" என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி பாளை காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் கருணாகரன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மற்றும் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

கண்காட்சியில் திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காளிஅரசன், கணேசன் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து ஹைட்ரோ ஏர் ராக்கெட் மாதிரி தயாரித்து வைத்திருந்தனர்.
இந்த ராக்கெட்டை 30 மீட்டர் உயரத்தில் கயிறு கட்டி அதில் இணைத்து பறக்கவிட்டனர். இது குறித்து, மாணவர்கள், "இந்த மாதிரி ராக்கெட், சிறிய குளிர்பான பாட்டிலை பயன்படுத்தி வடிவமைத்துள்ளோம். பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலில் சைக்கிளுக்கு காற்றடிக்க பயன்படுத்தப்படும் பம்ப் மூலம் காற்றை செலுத்தி பின்னர் கயிற்றில் இணைத்து 30 மீட்டர் உயரத்திற்கு ராக்கெட் இயக்கப்பட்டுள்ளது. இதே ராக்கெட்டை காற்று, மற்றும் நீரால் அழுத்தப்பட்டு சுமார் 300 மீட்டர் உயரத்திற்கு (5 மாடி கட்டிட உயரம்) பறக்கவிட முடியும்.
நாங்கள் இதே ராக்கெட்டை ஏற்கனவே மற்றொரு பள்ளி கண்காட்சியில் பறக்க செய்து முதல் பரிசு பெற்றுள்ளோம்" என பெருமையுடன் கூறினர். தனியார் பள்ளிகள் அனுமதிக்காக கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் தற்போதூ சாதித்து வருவது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications