ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட தெரியல அமைச்சருக்கு... கலாய்க்கும் நெட்டிசன்கள் !
சென்னை: ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட அதிமுக அமைச்சருக்கு தெரியலயா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்
தமிழகம், புதுச்சேரியில் ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தேர்வையொட்டி மாணவ, மாணவிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு வாழத்துத் தெரிவிக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெயரில் அவரது தொகுதியான திருமங்கலத்தில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
அதில், இன்று தொடங்குகின்ற +2 பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 100/100 மதிப்பெண்களோடு வெற்றி பெற்று ஒளிமயமான எதிர்காலத்தினை பெற்றிட வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பில் 100/100 மதிப்பெண் எப்படி? 200/200 என்று தான் மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ப்ளஸ் டூக்கு 200 மார்க் அது கூட தெரியல அமைச்சருக்கு என வறுத்தெடுத்து வருகின்றனர்.இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.