நியுட்ரினோ திட்டத்தை ஆந்திராவுக்கு அனுப்பல.. இங்கேயேதான் இருக்கு.. திட்ட அதிகாரி விவேக் திட்டவட்டம்
நியுட்ரினோ திட்டம் ஆந்திராவிற்கு அனுப்பப்படவில்லை என்றும் அது தமிழகத்தில்தான் இருக்கிறது என்றும் திட்ட அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நியுட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என்று நியுட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ திட்டம் 1200 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்தது.
அதே வேளையில் இதற்கு அனுமதி பெறுவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆந்திராவிற்கு இந்தத் திட்டத்தை கொண்டு செல்ல ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு இந்தத் திட்டம் சென்று விட்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில், தமிழகத்தில் நியுட்ரினோ அமைக்கும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அதன் திட்ட அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சொன்னபடி சுற்றுச்சூழல் அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி விவேக் தெரிவித்துள்ளார்.
நியுட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதால் அதிகாரிகள் அரசின் முடிவிற்காக காத்திருக்கின்றனர். அதே போன்று தேனியில் திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனையும் தமிழக அரசு நீக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாகத்தான் ஆந்திராவிற்கு செல்லாம் என்று ஆலோசித்து வந்ததாகவும், ஆனால் தமிழகத்தில் இருந்து வெளியேற முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் அதிகாரி விவேக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.